1
டி23 புலியை கொல்ல வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி பகுதியில் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், நான்கு மனிதர்களையும் தாக்கி கொன்ற டி23 புலியை 11வது நாளாக வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
புலியின் கால் தடத்தை சத்தியமங்கலம் மோப்பநாய் டைகர் கண்டறிந்துள்ளதாகவும், சிங்கார வனப் பகுதியில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் இருப்பதற்கான தடயங்கள் இருப்பதாகவும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆட்கொல்லி புலியை வேட்டையாடி பிடிப்பதற்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, நொய்டாவைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா டோக்ரே ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது புலியை உயிருடன் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது, புலியைக் கொல்லும் திட்டம் ஏதும் இல்லை என்று தமிழக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, புலியைப் பிடிக்கும் போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு நேரக்கூடாது. தேடப்பட்டு வரும் புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம். எனவே புலியைச் சுட்டுக் கொல்ல வேண்டாம்.
புலியைப் பிடிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தது.
**-பிரியா**
�,