அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமர் மோடியும் நேற்று (செப்டம்பர் 24) இரவு அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் சந்தித்தபோது இருவரும் சரளமாக ஜோக் அடித்து சிரித்துக் கொண்டிருந்தது உலகம் முழுதும் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், பிரதமர் நரேந்திர மோடியை மாலை வெள்ளை மாளிகையில் முதல் முறையாக சந்தித்தார். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின், நடந்த செய்தியாளர் சந்திப்பில் இருபெரும் நாடுகளின் தலைவர்களின் நகைச்சுவையால் வெடிச்சிரிப்புகள் ஜொலித்தன.
பைடன் பேசுகையில், எனக்கு உறுதியாக தெரியவில்லை ஆனால் நான் 1972 இல் 28 வயதில் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நான் பதவியேற்பதற்கு முன், மும்பையில் பைடன் என்ற நபரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவரை அதன் பின்னால் நான் தொடர முடியவில்லை என்று சொன்னேன். அடுத்த நாள் பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியாவில் ஐந்து பிடன்கள் இருப்பதாக என்னிடம் இந்திய பத்திரிக்கைகள் தெரிவித்தன, “என்று சொல்லி சிரித்தார் பைடன்.
இந்த கருத்துக்கு பிரதமர் மோடி சிரித்தார்.
அமெரிக்க அதிபர் தொடர்ந்தார், “அப்புறம் கிழக்கிந்திய தேநீர் நிறுவனத்தில் கேப்டனாக ஜார்ஜ் பைடன் இருப்பதை நான் கண்டுபிடித்தேன்” என்று மீண்டும் சிரித்தவர், “கடைசியில் அந்த ஜார்ஜ் பைடன் ஒரு இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். என்னால் அவரையும் அதன் பின்னால் கண்காணிக்க முடியவில்லை. அதனால் இந்த சந்திப்பு எனக்கு அவற்றை அறிந்துகொள்ள உதவும் ” என்றவர் மோடியைப் பார்க்க அரங்கமே சிரித்தது.
அதன் பின்னர், “ நகைச்சுவைகள் ஒருபுறம் இருக்க, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு வலுவாகவும் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் இருக்க வேண்டும். நாம் இருவரும் எவ்வித சவால்களையும் இணைந்தே சந்திப்போம்” என்றார் பைடன்.
இதன் பின் பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் பிடென் குடும்பப்பெயர்களைப் பற்றி பேசினீர்கள். நீங்கள் அதை என்னிடம் முன்பே குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் அது தொடர்பான ஆவணங்களை சேகரிக்க முயன்றேன். இப்போது கூட நான் சில ஆவணங்களுடன் வந்திருக்கிறேன். ஒருவேளை அந்த ஆவணங்கள் உங்களுக்கு ஏதேனும் பயன் தரக்கூடும்” என்று ஜோக் அடித்தார்.
வழக்கமாக இது போன்ற முக்கிய தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பில் என்ன பேச வேண்டும் என்பதை ஏற்கனவே தயார் செய்து ஸ்க்ரிப்ட் ஆக வைத்திருப்பார்கள். அதைத் தாண்டி தலைவர்கள் வேறு எதுவும் பேச மாட்டார்கள். ஆனால் அமெரிக்க அதிபர் அந்த மரபுகளை உடைத்து இந்தியா பற்றிய தனது நினவைலைகளை நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார். மோடியும் அவருக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து மகிழ்ச்சியின் அளவைக் கூட்டினார்.
**வேந்தன்**
�,”