புதுச்சேரியில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி. பதவியை, பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் விட்டுக்கொடுத்ததாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இதனிடையே இந்த பதவிக்கு பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கடும் போட்டியும், குழப்பமும் நிலவியது. இதுகுறித்து மின்னம்பலத்தில் [புதுச்சேரி ராஜ்யசபா எம்பி, யார்?](https://minnambalam.com/politics/2021/09/16/16/puducherry-rajya-sabha-mp-post-compete-between-nrcongress-and-bjp) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், “கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி புதுச்சேரி வந்த குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.
ராஜ்யசபா சீட் பாஜகவுக்குத்தான், வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவுசெய்யும் என்று அழுத்தமாகக் கூறிவிட்டு சென்றார் வெங்கையா நாயுடு. அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் வழக்கமாக மௌனத்தை மட்டும் காட்டிவிட்டு வெளியேறினார் ரங்கசாமி” என்று தெரிவித்திருந்தோம்.
இந்த சூழலில் முதல்வர் ரங்கசாமி தனது ஆதரவாளர்களிடம், புதுச்சேரியில் பாஜகவை வளர்த்துவிடுகிறோம் ராஜ்யசபா எம்.பி,யை ஒரு போதும் பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த பதவி பாஜகவுக்குதான் என்றும் வேட்பாளர் யார் என்று தலைமை முடிவு செய்யும் என்றும் வெங்கயா நாயுடு சொல்லிவிட்டுச் சென்றது போல, பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் லாஸ்பேட்டையைச் சேர்ந்த எஸ். செல்வகணபதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னணி குறித்து நாம் என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்த போது…
கடந்த வாரம் அமைச்சர் நமச்சிவாயம் முக்கிய பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று தலைவர்களைச் சந்தித்து புதுச்சேரி ராஜ்யசபா எம்பி பதவியை, என்.ஆர்.காங்கிரஸுக்கு விட்டுத்தரக்கூடாது. பாஜகவுக்குப் பெற்றாக வேண்டும். இந்த பதவியை காரைக்காலை சேர்ந்த வாசுவுக்கு கொடுக்கலாம் என்று காய் நகர்த்தினார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து சென்ற ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலிருந்து தாவிய கல்யாணசுந்தரமும் ராஜ்யசபா எம்.பி. பதவியை சென்னையைச் சேர்ந்த தயாரிப்பாளார் ஐசரி கணேஷ்க்கு கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்தனர்.
இதனை அமைதியாக கேட்டுக்கொண்ட பாஜக -ஆர்.எஸ்.எஸ் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், ஆரம்பக் காலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருப்பவரும், விவேகானந்த பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு இடம் கொடுத்து வந்தவரும், கடந்த ஆட்சியில் நியமன எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான செல்வகணபதியை ராஜ்யசபா எம்பியாக்க முடிவு செய்தனர். இதுதொடர்பான அசைன்மெண்ட்டை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ஒப்படைத்தார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா.
துணை நிலை ஆளுநர் தமிழிசை, நேற்று முன்தினம் (செப்டம்பர் 20) , முதல்வர் ரங்கசாமியை அழைத்து, ’அழுத்தமாக, ராஜ்யசபா எம்.பி. பதவியை பாஜகவுக்கு விட்டுக்கொடுங்கள் என்றும், இல்லை என்றாலும் பாஜக வேட்பாளர் வெற்றிபெறுவார் அந்த தோல்வி உங்கள் இமேஜை பாதிக்கும்’ என்றும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்குக் கட்சி நிர்வாகிகளைக் கேட்டு முடிவு சொல்கிறேன் என்று பதிலளித்த முதல்வர், பின்னர் எந்த பதிலும் சொல்லாத நிலையில் நேற்று செப்டம்பர் 21ஆம் தேதி, புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு செல்வகணபதி போட்டியிடுவார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது” என்கிறார்கள்
அதே சமயத்தில், முதல்வர் ரங்கசாமியின் முழு சம்மதத்துடன் தான் பாஜக வேட்பாளரை அறிவித்தோம் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.
**-வணங்காமுடி**
�,