நீட்டுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரச்சாரம்!

politics

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மற்றும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திராவிடர் கழகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிராகவும், அதுபற்றி ஆலோசிக்கவும் திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஊடக பிரிவுத்தலைவர் ஆ.கோபண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீட் தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி முந்தைய அரசு, அவசரக் கோலத்தில் சட்டப்படியான முகாந்திரமும், நியாயப்படியான நிலைப்பாடு எதனையும் நிறுவிட முன்வராமல் மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றியதைப் போல் அல்லாமல், சட்ட முறைமைகளை முறையாகக் கடைப்பிடிக்கும் விதமாக நீட் தேர்வு குறித்து நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஆணையம் அமைத்து, சமூக, பொருளாதார, கல்வி நிலை அடிப்படைக் காரணங்களை முறையாக ஆராய்ந்து வழங்கப்பட்ட அவ்வாணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்ட மசோதா இயற்றப்பட்டு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தகைய முறையான சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் இசைவினையும் பெற தமிழக அரசுக்கும், முதல்வர் எடுக்கும் முயற்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் முழு ஆதரவினையும் வழங்கவேண்டும்.

கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும்.

ஒரு பக்கம் சட்டப்பேரவை, நீதிமன்றங்கள் மூலமாகப் போராட்டங்களை நடத்தி வந்தாலும், மக்கள் மன்றத்தின் மூலமாக நடத்தப்படும் போராட்டம் மிகவும் முக்கியமானதும், வலிமையானதுமாகும். கடந்த காலங்களில் மக்கள் பிரச்சினையில் வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தை நடத்தியதன் மூலமாக, வெகுமக்களின் எழுச்சி காரணமாக கோரிக்கைகள், உரிமைகள் வெற்றி பெற்றுள்ளன என்பதுதான் வரலாறு.

‘நீட்’டுக்கு எதிராக வெகுமக்களின் எழுச்சி கிளர்ந்துள்ள நிலையில், அதனை ஒருமுகப்படுத்தும் வகையிலும், மேலும் அதனைக் கூர்மைப்படுத்தும் வகையிலும் சமூக நீதிக்கான எழுச்சி மாநாடுகளை சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் நடத்துவது என்று இந்த ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும், நீட் ஒன்றும் தகுதிக்கு அளவுகோல் இல்லை என்றும், நீட் கேள்வித்தாள் 35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதும் – ஆள்மாறாட்டம் செய்யப்படுவதும் – இது யாருக்குப் பயன்படக் கூடியது என்பது விளங்கக் கூடியதாகும். முறைகேடுக்கு அப்பாற்பட்ட முறையே நீட் என்பது சுத்தப் புரட்டு என்பதும் இவற்றின்மூலம் அம்பலமாகி விட்டது என்பதையும் இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில், இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு உள்ளிட்ட எந்தப் படிப்புகளிலும் ‘நீட்’ தேர்வு நுழைய அனுமதிக்கக் கூடாது.

அகில இந்தியத் தொகுப்புக்கு, மருத்துவ இடங்களை வழங்குவதிலிருந்து தமிழ்நாடு விலக்கு பெற வேண்டும். மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) நெக்ஸ்ட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றின் மூலம் சமூக நீதியின் தேவையைப் புரிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொருவரும் நாள்தோறும் நீட் எதிர்ப்புக்கான காரணங்களையும், நீட்டினால் ஏற்படும் பாதிப்புகளையும் எளிய முறையில் சிறப்பாகப் பரப்புவதை முக்கியக் கடமையாகக் கொண்டு செயல்படுமாறும் இந்தக் கலந்துரையாடல் கூட்டம் கேட்டுக்கொள்கிறது. மேலும் தேவையான வகைகளில் மக்கள் போராட்டங்களையும் முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது”.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *