கே.சி.வீரமணி வீட்டில் 551 யூனிட் மணல்: கனிம வளத்துறை!

politics

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மணல் தொடர்பாக ஆய்வு செய்த கனிமவளத் துறை அதிகாரிகள் அதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக 654 சதவிகிதம் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து வீரமணி மற்றும் அவரது உறவினர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் செப்டம்பர் 16ஆம் தேதி சோதனை நடத்தினர்.

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் ஜோலார்பேட்டை இடையப்பட்டி காந்தி சாலையில் உள்ள வீரமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் 275 யூனிட் அளவுக்கு மணல் பதுக்கி வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் பெர்னார்டு முன்னாள் அமைச்சரின் வீட்டில் ஆய்வு செய்தார். ஆய்வை தொடர்ந்து அங்கு இருந்த மணல் இருப்பு குறித்த அறிக்கையைத் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் அவர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த ஆய்வில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்த அளவை காட்டிலும் கூடுதல் யூனிட் மணல் கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 551 யூனிட் மணல் பதுக்கி வைத்திருப்பதாகக் கனிமவள அதிகாரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இவ்வளவு மணல் எங்கிருந்து வாங்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சரிடம் விளக்கம் கேட்க இருப்பதாகவும் , அதற்கான உரிய ரசீது தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லை என்றால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் கனிமவளத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *