முதல்வர் ஸ்டாலினை நிர்பந்திக்ககூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!

politics

முதல்வர் ஸ்டாலினை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நிர்பந்திக்கக் கூடாது என்று சிறப்பு நீதிமன்றத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றியும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் குறித்தும் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த கருத்துகள் இருவரது பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அவர்கள் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டாலின் மீது தமிழ்நாடு அரசு இரு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தன. இந்த வழக்கில் முதல்வர் ஸ்டாலின் ஆஜராகச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுபோன்று, அதிமுக அரசுக்கு எதிராகவும், முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியதாக, 17 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்டன.

தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்த நிலையில் 130 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற முடிவெடுத்துள்ளதாகத் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெறும் முன்னர் சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளைத் திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று (செப்டம்பர் 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், முதல்வர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது வழக்குகள் தொடர்பான விவரங்களை அட்டவணையாகத் தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்குகளில் முதல்வர் ஸ்டாலினை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக் கூடாது என, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் அடுத்த மாதம் 8ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *