தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி நேற்று (செப்டம்பர் 16) இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவை சகாக்களோடு நேரில் சென்று வரவேற்றார்,.
தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தற்போது நாகாலாந்து ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி. தமிழ்நாட்டின் ஆளுநராக அறிவிக்கப்பட்டார்.
உளவுத்துறையில் பழுத்த அனுபவம் பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவியின் நியமனம் பற்றி முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்தேகம் கிளப்பினார். கல்வியாளர்கள், அரசியலமைப்பு சட்ட அனுபவம் பெற்ற மூத்த அதிகாரிகள் ஆளுநராக நியமிக்கப்பட்டு வந்த நிலையில் ஓர் உளவுத்துறை அதிகாரி தமிழ்நாட்டுக்கு ஏன் ஆளுநராக நியமிக்கப்படுகிறார் என்று சந்தேகம் தெரிவித்த அழகிரி, ஏற்கனவே புதுச்சேரியில் போலீஸ் அதிகாரி கிரண் பேடி ஆளுநராக இருந்தததையும் நினைவுகூர்ந்தார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் இந்த ஆளுநர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இவ்வாறு சென்னை வருவதற்கு முன்பே அரசியல் வட்டாரத்தை அதிர்வுபடுத்திய ஆளுநர் ரவி நேற்று இரவு சென்னை விமானநிலையம் வந்தார். அவரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் உடன் இருந்தனர்.
தமிழகத்தின் 25-வது ஆளுநராக வந்திருக்கும் ஆர்.என்.ரவிக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி நாளை (செப்டம்பர் 18) பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
**-வேந்தன்**
�,