அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 விழுக்காடு இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் அறிவிப்புகளும் நடைபெற்று வருகின்றன.
இன்றைய(செப்டம்பர் 9) சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றத்தில் புதிய கலை அறிவியல் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 25 சதவிகிதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ” திருப்பரங்குன்றத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. இந்தாண்டு புதிதாக 21 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தாண்டு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததால் கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால், அரசு கல்லூரிகளில் நடப்பாண்டு முதல் 25% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரையில் ஏற்கனவே 10 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை 15 விழுக்காடாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
**-வினிதா**
�,