பள்ளி மாணவர்களின் புத்தக பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட்டு அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்கள் பொறிக்கப்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தக பைகளை கைவிடும்படி பள்ளிக்கல்வித் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொது மக்களுடைய வரி பணத்தை வீணாக்க கூடாது. எனவே ஏற்கனவே பிரிண்ட் செய்யப்பட்ட பாடப்புத்தகங்கள் நோட்டுகள், புத்தகப் பைகளை மாணவ மாணவிகளுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பாடப்புத்தகங்கள் நோட்டுகள் பைகளில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை பிரிண்ட் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்டம்பர் 7) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, முன்னாள் முதல்வர் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தக பைகள் 10 லட்சம் எழுதுபொருட்கள் வீணாக்கப் படமாட்டாது. அவை மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதோடு பள்ளி புத்தக பைகளில் படத்தை அச்சிட முதல்வர் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், பள்ளி மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால் புத்தக பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை அச்சிட்டு அரசு நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது. இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விளம்பரங்களுக்கு அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், பள்ளி புத்தக பைகளில் தலைவர்கள் படம் அச்சிட விரும்பாத முதல்வருக்கு பாராட்டை தெரிவிப்பதாக கூறினர்.
**-பிரியா**
�,