தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் செய்தித் தறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்குச் சிலை அமைக்கப்படும்.
சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும்.
சென்னை கிண்டி மண்டப வளாகத்தில் மருது சகோதரர்களுக்குச் சிலை அமைக்கப்படும்.
கடலூரில் சுதந்திரப் போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்குச் சிலை அமைக்கப்படும்.
நாவலர் நெடுஞ்செழியனுக்குச் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் சிலை வைக்கப்படும்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்குப் புதுக்கோட்டையில் சிலை வைக்கப்படும் .
பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.
இளம் பத்திரிகையாளர்கள் ஊடகத் துறையில் சிறந்து விளங்கவும், அதன் நுணுக்கங்களை முழுமையாக அறிந்து கொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆர்வம் உள்ள தகுதி வாய்ந்த இளம் பத்திரிகையாளர்களைத் தேர்வு செய்து இந்திய அளவில் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னல் போன்ற பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயிற்சி பெற நிதி உதவி வழங்கப்படும்.
பணிக் காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப நிதி 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இதழியல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மற்றும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
**-பிரியா**
�,