தலைவர்கள் புகழ் பாடாதீர்கள்: ஸ்டாலின் எச்சரிக்கை

politics

சட்டப்பேரவையில் தலைவர்கள் புகழ் பாட வேண்டாம் என்று திமுக எம்எல்ஏ ஐயப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) எச்சரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திப் பேசினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் உரைகளின் போதும், பதில் அளிக்கும் போதும் தங்களை உருவாக்கிய ஆளாக்கிய முன்னோடிகளைக் குறிப்பிட்டு வணக்கம் செலுத்திப் பேசுவது முறையாக இருக்கும்.

ஆனால் கேள்வி நேரத்துக்கும், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அமைச்சர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இது என் கட்டளை என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் இன்றும் மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக உறுப்பினர் ஐயப்பன் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். முதலமைச்சர் கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் சாதனைகள் ஆகியவை குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் புகழ் பாட வேண்டாம் என்று நேற்றே சொல்லியிருந்தேன். சட்டமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட நேரத்தை மனதில் வைத்துப் பேச வேண்டும். எதையும் அளவுடன் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *