சட்டப்பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்குப் பாராட்டு தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நிறைவேற்றினார். அதனை முன்மொழிந்து சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியினரும், துரைமுருகனைப் புகழ்ந்து பேசி பாராட்டு தெரிவித்தனர்.
முதல்வரின் பேச்சு மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பாராட்டுகளால் நெகிழ்ந்துபோன துரைமுருகன் அவையில் கண்கலங்கினார்.
இதையடுத்து அவையில் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், என் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் வார்த்தைகளையும் பேசுவதற்கான பொருளையும் தேடி அலைந்ததில்லை. இன்று வார்த்தையும் வரவில்லை. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை.
என் வாழ்நாளில் பல வெற்றி தோல்விகளைக் கண்டிருக்கிறேன். அவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பதைப் போன்று, கழகத் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, அனைத்துக் கட்சி தலைவர்களும் என்னை பாராட்டியது நெஞ்சம் நெகிழ்கிறது. இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின் எதையும் அவசரப்பட்டுப் பேசமாட்டார். ஸ்டாலின் கொஞ்சம் அழுத்தமானவர் எனக் கலைஞர் கூறியிருக்கிறார். ஆனால் இன்று அவர் என் மீது காட்டியிருக்கும் அன்பையும், பாசத்தையும் எண்ணிக் கிறுகிறுத்துப் போனேன்.
ஒரு சாதாரண கிராமத்தில், ஒரு விவசாயியை மகனாகப் பிறந்தேன். பள்ளிக்கூடம் கூட எங்கள் ஊரில் கிடையாது. மின்சார, சாலை வசதி கிடையாது. நான் கல்லூரியில் பயின்ற போது முரசொலி செல்வம் எனக்கு உற்ற நண்பராக இருந்தார். பிறகு கலைஞர் எனக்குப் பழக்கமானார். நான் என்ன ஊர், சாதி என எனது பின்னணியைக் கலைஞர் கேட்டது இல்லை. நான் மாணவராக இருந்த போதே என்னை நண்பனைப் போல் கலைஞர் நடத்தினார்.
1971ல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடச் சொன்ன போது தான் என்ன சாதி என்று அவர் கேட்டார். அவ்வளவு பாசம் என் மீது கலைஞர் வைத்திருந்தார். நானும் அவரும் மணிக்கணக்கில் அமர்ந்து பேசுவோம். எனக்கு எல்லாமுமாக இருந்தவர் கலைஞர். கலைஞரின் மறைவுக்குப் பிறகு வெற்றிடம் ஏற்பட்டது.
ஆனால் தற்போது, கலைஞரின் பாசத்தை மிஞ்சும் அளவுக்கு எப்பேர்ப்பட்ட கவுரவத்தை ஸ்டாலின் அளித்திருக்கிறார். அனைத்து தலைவரும் பாராட்டியிருக்கிறீர்கள். என்ன கைமாறு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை.
இவ்வளவு பாசத்தை அவர் வைத்திருப்பார் என நினைத்தும் பார்த்ததில்லை. சட்டப்பேரவையாக இல்லாமல் வேறு இடமாக இருந்திருந்தால் அவரை கட்டிப்பிடித்து அழுதிருப்பேன். நான் அதிகமாகப் பழகியவர்கள், அண்ணா, கலைஞர் எம்.ஜி.யார், இன்று ஸ்டாலின். முதல்முறையாக எனக்குப் பேசத் தெரியவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறேன்” என உருக்கமாகப் பேசினார் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.
**-பிரியா**
�,”