மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கினார்.
தமிழகத்துக்கும், தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கி, வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த விருது ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விருதை பெறும் முதல் தமிழ் ஆளுமையாக, நீண்ட கால அரசியல்வாதியும், சுதந்திர போராட்ட தியாகியும், மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார்.
கொரோனா பரவல் மற்றும் வயது மூப்பின் காரணமாக சங்கரய்யா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே இருக்கிறார். வெளியில் எங்கும் செல்வதில்லை. அதனால், அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை நேரில் சந்தித்து வழங்கினார். ‘தகைசால் தமிழர்’ விருதுடன் ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்த என். சங்கரய்யா ஏற்கனவே சொன்னதுபோல், தமிழ்நாடு முதல்வரின் கொரனோ நிவாரண நிதிக்கு தனக்கு அளிக்கப்பட்ட ரூ.10 லட்சத்தை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, அன்பரசன், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
**-வினிதா**
�,