சர்ச்சையின் பிறப்பிடமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளத்தில் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நோக்கத்தோடு சகட்டு மேனிக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மீரா மிதுன் பட்டியலின சமூகத்தினரையும் மற்றும் அச்சமூகத்தைச் சார்ந்த திரைப்பட இயக்குநர்களையும் மிகவும் இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னி அரசு உள்ளிட்டோர் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மீரா மிதுனை நிச்சயம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அப்போது, தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்குப் போகவில்லையா..? ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது ; அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும்..! என அவர் கூறியது சர்ச்சையைப் பெரிதாக்கியது.
மீரா மிதுன் கைது… pic.twitter.com/KoLgQX59U2
— ஆந்தைகண்ணன் (@cinemascopetaml) August 14, 2021
மீரா மிதுனின் இந்த பேச்சு மீண்டும் தமிழக மக்களைக் கோபத்தில் ஆழ்த்தியது. இவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என காவல்துறை மற்றும் தமிழக அரசை நோக்கி கேள்விகள் எழுந்தது. இந்நிலையில், மீரா மிதுன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவிலிருந்த அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார், சென்னை அழைத்து வருகின்றனர்.
தன்னை கைது செய்ய போலீசார் வருவதை அறிந்த மீரா மிதுன் அதையும் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் போலீசார் தனது அறைக்குள் நுழைந்துள்ளதைக் காட்டும் மீரா மிதுன், கொஞ்சமும் மரியாதை இல்லாமல், “இவனுங்க எல்லாரும் என்னை டார்ச்சர் பண்றாங்க. முதலமைச்சரே ஒரு தமிழ் பொண்ணுக்கு இப்படித்தான் நடக்கணுமா? என கதறி அழுவது போல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
**-இராமானுஜம்**
�,”