அன்னைத் தமிழில் அர்ச்சனைக்கான போற்றி பாடல் நூல்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
தமிழகத்திலுள்ள கோயில்களில், ‘தமிழில் அர்ச்சனை’ திட்டம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கியது. தொடர்ந்து, தமிழகம் முழுவதுமுள்ள 536 கோயில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனை திட்டம் விரிவுபடுத்தப்படும் அனைத்துக் கோயில்களுக்கும் 14 போற்றி புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று தமிழில் அர்ச்சனை செய்வதற்கான போற்றி பாடல் நூல்களை முதல்வர் வெளியிட்டுள்ளார். அப்போது, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாப்பூர், கபாலீசுவரர் திருக்கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை” செய்யவிருக்கும் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகையை 3.8.2021 அன்று வெளியிட்டார்.
“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” எனும் கொள்கையில் திளைத்த தமிழ் அறிந்த பெருமக்கள் மற்றும் பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க, தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இந்த முயற்சியின் மூலம், கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தாம் அறிந்த தமிழ்மொழி மூலம் அர்ச்சனை என்பதால் அகமகிழ்வார்கள். அறிந்த மொழியில் அர்ச்சனை செய்வதை ஊக்குவிக்கவும், அர்ச்சகர் சொல்வதைப் பக்தர்கள் புரிந்து கொள்வதற்காகவும் இந்தப் போற்றி நூல்கள் உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,”