தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா!

politics

கடந்த இரண்டு வாரங்களாக கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிற நிலையில், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதுபோன்று தற்போது தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று (ஆகஸ்ட் 10) செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய சுகாதாரத் துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால், கடந்த இரண்டு வாரங்களாக கேரளா , தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் 37 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கேரளாவில் 11 மாவட்டங்கள், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள், இமாச்சலப் பிரதேசத்தில் 6, கர்நாடகாவில் 5, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் இருந்து தலா 2, மேகாலயா, மிசோரத்தில் தலா 1 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

மொத்த பாதிப்பில் கேரளா மாநிலத்தில் மட்டுமே 51.51 சதவிகித பாதிப்பு பதிவாகிறது. அங்கு கொரோனா பரவலைக் கட்டுபடுத்துவதற்காக ஒன்றிய அரசின் குழு அனுப்பப்பட்டுள்ளது.

11 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 சதவிகிதமாக இருக்கிறது. இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா 86 மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா குறைந்துவரும்போது மேற்கூறிய மாவட்டங்களில் மட்டும் தொற்று அதிகரித்து வருவது பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை உயர்த்தி தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், “மாறுபாடு அடைந்த டெல்டா வைரஸ் தற்போது உலகையே ஆண்டு வருகிறது. உலகில் தற்போது அதிகரித்து வரும் பரவலுக்கு இந்த மாறுபாடு அடைந்த வைரஸ்தான் காரணம். இது வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் 100 பேருக்கு பரவும் வேகம் கொண்டது என்றால் ஆல்பா வைரஸ் 160 பேருக்கு என்ற அளவிலும் டெல்டா வைரஸ் 250 பேருக்கு என்ற அளவிலும் பரவக் கூடிய தன்மை கொண்டது. இந்த வைரஸ் ஒரு நபரால் பலருக்கு பரப்பப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் டெல்டா வகை வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் உள்ளன. அது சற்று ஆறுதலை அளிக்கிறது” என்று கூறினார்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *