ஆக.13 முதல் செப்.21 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!

politics

இந்தாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதிமுதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் இன்று(ஆகஸ்ட் 10) நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்டு கட்சிகள்,பாஜக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “ தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 13ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை, நிதியமைச்சர் மூலம் தாக்கல் செய்யப்படுகிறது. இது காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. அனைத்து உறுப்பினர்களுக்கு முன்பும் கணினி வைக்கப்படும். நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்க வாசிக்க அதன் பகுதிகள் கணினி திரையில் வந்து கொண்டிருக்கும். உறுப்பினர்களுக்கு டேப் வழங்கப்பட்டு, புத்தக வடிவில் தகவல்கள் இடம்பெறும்.

ஏற்கனவே ஆளுநர் உரையில் குறிப்பிட்டதுபோன்று, ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண்மைக்கென்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இந்த இரண்டு பட்ஜெட்கள் மீதும் 16 ஆம்தேதி முதல் 19 ஆம் தேதி வரை 4 நாட்கள் விவாதம் நடைபெறும். அதன் பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் பதில் உரையோடு முடிவு பெறுகிறது.

அதன்பின்பு, வருகிற 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதிவரை பொது மானிய கோரிக்கைகள் அந்தந்த துறை அமைச்சர்களால் தாக்கல் செய்யப்படுகிறது.அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். மொத்தம் 29நாட்கள் சட்டசபை நடைபெறும். செப்டம்பர் 21ஆம் தேதியோடு பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது” என்று கூறினார்.

அதிமுக சார்பில் யாரும் வரவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர், இன்று அவர்களுக்கு வசதி குறைவு ஏற்பட்டிருக்கும். அதனால் வராமல் இருந்திருக்கலாம் என்று கூறினார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *