தமிழகம் முழுவதும் 52 இடங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று (ஆகஸ்டு 10)சோதனை நடைபெற்று வரும் நிலையில் கோவை வீட்டிலோ சென்னை வீட்டிலோ எஸ்.பி. வேலுமணி இல்லை.
சட்டமன்றம் கூட இருப்பதாலும் வேலுமணி அதிமுகவின் சட்டமன்ற கொறடாவாக இருப்பதாலும் அது தொடர்பான பணிகளுக்காக சென்னை வந்த வேலுமணி, சென்னை அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில்தான் இருந்தார்.
நேற்று இரவே இதை உறுதிப்படுத்திக்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று காலை அனைத்து இடங்களிலும் ரெய்டுக்காக செல்லும்போதே ஒரு குழுவினர் எம்.எல்.ஏ, ஹாஸ்டலில் உள்ள வேலுமணியின் அறைக்கும் சென்றனர். அங்கே காலை 6 மணியில் இருந்தே அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
வேலுமணியின் கோவை வீட்டில் அதிமுகவினர் குவிந்த நிலையில் அங்கே அவர் இல்லை என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் சென்னை ஆர்.ஏ,புரத்தில் இருக்கும் வீட்டிலும் அவர் இல்லை என்றும் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில்தான் இருக்கிறார் என்று தெரிந்து சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ராஜேஷ்பாபு, பாலகங்கா, விருகை ரவி உள்ளிட்டோர் வந்துவிட்டனர். அவர்களையடுத்து நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்களும் குவிந்தனர்.
இதையடுத்து போலீஸாரும் குவிக்கப்பட்டனர். வெளியே அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது.
கீழே இப்படியென்றால் பத்தாவது மாடியில் வேலுமணியின் அறையில் அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக மாவட்டச் செயலாளர்களைத் தொடர்ந்து முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்கு விரைந்தனர். அவர்களையும் போலீஸார் உள்ளே விடமாட்டேன் என மறுத்தார்கள். இது தொடர்பாக வாக்கு வாதம் நடக்க ஒருகட்டத்தில் முன்னாள் அமைச்சர்களையும், அதிமுக மாவட்டச் செயலாளர்களையும் மட்டும் போலீசார் எம்.எல்.ஏ.ஹாஸ்டல் வளாகத்துக்குள் அனுமதித்தனர்.
ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் யாரும் பத்தாவது மாடியில் இருக்கும் வேலுமணியின் அறை அருகே அனுமதிக்கப்படவில்லை. வேலுமணியிடம் பல்வேறு ஆவணங்களை முன் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
**-வேந்தன்**
�,