தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்டு 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை பற்றியும், 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பற்றியும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த அதிமுக அரசு சார்பில் இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசின் முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன. அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராட்டம் செய்யத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் தமிழக மக்களுக்கு தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை உணர்த்தும் வகையில் நிதி நிலைமை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு, அதன் பின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள தகவலின்படி,
தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆகஸ்டு 13 ஆம் தேதி கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் கூட்டியுள்ளார்
2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதி நிலை அறிக்கையை ஆகஸ்டு 13 அன்று பேரவைக்கு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் நாள் குறித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு நிதி நிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும்”என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து 120 பக்கங்களுக்கு அந்த வெள்ளையறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசுக்கு இருக்கும் கடன் விவரங்கள், வருவாய் இழப்புகள் மற்றும் அதற்கான காரணங்கள் அனைத்தும் இந்த வெள்ளையறிக்கையில் இடம்பெறும் என்றும் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-வேந்தன்**�,”