மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஏழு பேருக்குத் தூக்குத் தண்டனையும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூலிப் படையினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசு ராஜன், டாக்டர் ஜேம்ஸ், சதீஷ் குமார், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று (ஆகஸ்ட் 4) [தீர்ப்பு வழங்கினார்.](https://www.minnambalam.com/politics/2021/08/04/16/hogh-court-verdict-in-doctor-subbaiya-murder-case)
இதைத்தொடர்ந்து இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை விபரங்களும் வெளியாகியுள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ், சதீஷ்குமார், செல்வ பிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனை மற்றும் தலா ரூபாய் 50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அப்ரூவரான ஐயப்பன் அரசு சாட்சி என்பதால் அவருக்குத் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை.
இந்த தீர்ப்பு குறித்து மருத்துவரின் மனைவி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ என்னுடைய கணவர் திரும்பி வரப்போவதில்லை. நீதித்துறை மீது நம்பிக்கை இருந்தது. அது வீண் போகவில்லை. தாமதமானாலும் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. அரசுக்கும், நீதித் துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றி கூறவிரும்புகிறேன். இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்.
கணவர் சுப்பையா மரண வேதனை அனுபவித்த 9 நாட்களும் மணமாகாத எங்கள் மகள்களை நினைத்துதான் கலங்கினார்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
**-பிரியா**
�,”