நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்ட வழக்கில் இன்று (ஜூலை 27) திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தனது ரோல்ஸ்காய் காருக்கு ஏற்கனவே இறக்குமதி வரி செலுத்தப்பட்டு விட்ட நிலையில் மீண்டும் நுழைவு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அப்போது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு விஜய்க்கு ஒருலட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் அவர், “சமூக நீதிக்கு பாடுபடுவதாக சொல்லிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு” என்றெல்லாம் கருத்து தெரிவித்தார்.
இதனால் விஜய்யின் இமேஜ் பொது சமூகத்தில் கடும் பாதிப்புக்குள்ளாகியது.
இந்நிலையில் இதை எதிர்த்து விஜய் தரப்பு மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, “நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை. நீதிமன்றத்தை நாடியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மற்றவர்களை போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது. மற்றவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் இது போன்ற உத்தவுகளை பிறப்பிக்காத நிலையில் நடிகர் என்பதால் விஜய்யை மட்டும் விமரிசித்தது ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒட்டுமொத்த நடிகர்களையே அவமதிக்கும் வகையில் அமைந்துவிட்டது”என்று விஜய் தரப்பில் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் விஜய்யின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
ட்விட்டரில் இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
**-வேந்தன்**
�,