�
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் 11ஆவது முறையாக 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் 25ஆம் தேதி ஆணையம் அமைக்கப்பட்டது. 2017 நவம்பர் 22ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையைத் தொடங்கி அப்பல்லோ மருத்துவர்கள், நிர்வாகத்தினர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
ஆணையம் அமைத்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னும் விசாரணை நிறைவடையவில்லை. இதுவரை 10 முறைக்கும் மேல் இந்த ஆணையத்துக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த ஜூலை 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இந்த ஆணையம் விசாரணையை 3 மாதங்களில் முடித்து, இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்று ஏன் உத்தரவிடக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பியது சென்னை உயர் நீதிமன்றம். இவ்வழக்கு தொடர்பாக 6 வாரங்களில் பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்றுடன் ஆணையத்தின் காலம் முடிவடைவதால், மேலும் 6 மாதங்களுக்கு ஆணையத்தின் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,