தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இன்று (ஜூலை 11) நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பு போன்று ஆர்வமாக அரசியலில் ஈடுபடுவதில்லை. அவரது சார்பாக மனைவி பிரேமலதா, மகன்கள் ஆகியோர்தான் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த தேர்தலில் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட ஒருசில கசப்பான நிகழ்வுகளால் தேமுதிக, அதிமுகவிலிருந்து விலகி, அமமுகவில் இணைந்தது. இருந்தபோதிலும், போட்டியிட்ட 60 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. விஜயகாந்த்தின் உடல் நலக் குறைவு, தேர்தல் தோல்வி என அதிருப்தியில் இருக்கும் [தேமுதிக மா.செ.க்கள் திமுக பக்கம் செல்ல தயாராகி வருகின்றனர்](https://minnambalam.com/politics/2021/06/02/37/dmdk-District-Secretaries=goe-to-dmk-party).
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட்டாக இன்று, சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.
முதல்வரை, ‘வாங்க அண்ணா, உங்காருங்க’ என வரவேற்றார் பிரேமலதா. பின்னர் விஜயகாந்த் அருகில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின், அவரது கையை பிடித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து முதல்வரையும் அவருடன் வந்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ஆ.ராசா எம்,பி ஆகியோரையும் வரவேற்று சைகையால் அமரச் சொன்னார் விஜயகாந்த்.
பின்னர் முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் துரைமுருகனும் விஜயகாந்த்துக்குச் சால்வை அணிவித்தனர். விஜயகாந்த்தும் முதல்வருக்குச் சால்வை அணிவித்து, கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார். அப்போது பிரேமலதா, ’இந்த காசோலையை என் கையால் நான்தான் கொடுப்பேன் என்று ஏற்கனவே சொல்லிருந்தார்(விஜயகாந்த்)’ என்று முதல்வரிடம் கூறினார்.
முதல்வரின் வருகை குறித்து விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்’ என்று பதிவிட்டு இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
முதல்வரின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாகியுள்ளது. ஒருவேளை உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தேமுதிக மாறுமோ என்ற பேச்சுகளும் அடிபடுகின்றன.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவும், தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது,
**-பிரியா**
�,”