தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (ஜூலை 4) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக சென்னையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை பெற்ற நிலையில் அமைச்சரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம். தேர்தல் பிரச்சார காலத்திலேயே எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மார்ச் 29 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்காக அவரது மகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பின் குணமடைந்த எம்.ஆர்.கே. தேர்தலிலும் வெற்றிபெற்று வேளாண் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
கொரோனா தொற்றால் தாக்கப்பட்டு குணமடைந்தவர்கள் அதன் பின் குறிப்பிட்ட சில பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்று மருத்துவ வட்டாரத்தில் சொல்லப்படும் நிலையில்தான், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அமைச்சர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்.
**-வேந்தன்**�,