ஜி7, நேட்டோ, பைடன் – புதின் சந்திப்பும் அதன் இந்திய எதிரொலிப்பும் – பகுதி 2

politics

அம்பானிக்கு சாதகமாக வெளிநாட்டு பெரு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், அவர்களின் மீதான முற்றுருமை சட்ட நடவடிக்கைகள், ப்யூச்சர் குழுமத்தைக் கைப்பற்றுவதில் அமேசான் – ஜியோவுடனான மோதல் என வெளிப்பட்டு வருகிறது. அதோடு பாஜகவின் அரசியலுக்கு இசைந்த முகநூல் நிறுவனத்தைப் போன்று எல்லா சமூக ஊடகங்களையும் வளைக்க முற்படும் பாஜகவின் முயற்சி அவர்களுடன் ஒரு முரணை ஏற்படுத்தி வருகிறது.

இந்த ஜி7 சந்திப்பின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை அரசுகள் இணைய முடக்கத்தைக் கண்டிக்கும் வாசகத்தை ‘அரசியல் காரணங்களுக்காக’ என இந்திய அரசாங்கம் திருத்தம் செய்ய வைத்தாலும் அது மறைமுகமாக காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி, இந்தியாவை வழிக்குக் கொண்டுவரும் உத்தி என்பதை எளிதாக ஊகிக்கலாம்.

சீன – பாகிஸ்தான் கூட்டு CPEC திட்ட வழிதடத்துக்கு அருகில் இருக்கும் காஷ்மீர், முந்தைய டிரம்ப் நிர்வாகத்தின்போது முக்கியத்துவம் பெற்றது. இப்போது அமெரிக்க – சீன முற்றல் குறைந்து வருவது, ஆப்கானிஸ்தான் படை விலக்கம் உள்ளிட்ட மாற்றங்கள்… அதன் பரிமாணத்தை மாற்றி இருக்கிறது. இப்போது இந்த பகுதி இந்திய மனித உரிமை பிரச்சினையைக் கிளப்பி, அமெரிக்க நிறுவனங்களின் நலனுக்கு புறம்பான இந்திய அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவரும் ஆயுதமாக்க முற்படும் நிலையிலேயே காஷ்மீர் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. அமெரிக்க நிறுவன நலனை காக்க மனித உரிமை ஆயுதத்தைக் கையில் எடுப்பார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

அதோடு இந்தியா இன்னொரு பனிப்போர் வருமென்று எதிர்பார்த்து செய்த அத்தனை அரசியல் நகர்வுகளும் தவறு என இந்தக் கூட்டம் உரத்துக்கூறுவதாக இருந்தது. சீனாவின் மனித உரிமை மீறலைக் கண்டிக்கும் பகுதி ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்பு இன்றி நீர்த்துப்போனது. அமெரிக்காவை மீளக்கட்டமைத்தல் என்ற முழக்கத்தை நீட்டித்து உலகை மீளக்கட்டமைத்தல் என்ற முழக்கம் எந்த அரசியல் முக்கியத்துவமும் அற்ற முழக்கமாகவே காண வேண்டியிருக்கிறது. இந்தப் பல பில்லியன் டாலர் முன்னெடுப்பை சீனாவின் பல ட்ரில்லியன் முன்னெடுப்புக்கு மாற்றாக யாரும் காணவில்லை. இதற்கான நிதி எங்கிருந்து வருமென்ற எந்தத் தகவலும் அதில் இல்லை.

மத்திய கிழக்கு போர்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளைத் தொடர்ந்து ஜெர்மனி தனது எரிபொருள் தேவையை உறுதி செய்யும் பொருட்டு ரஷ்யாவுடன் நோர்டுஸ்டிரீம்2 எரிவாயு குழாய் அமைக்கும் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடை விதித்தது. அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஜெர்மனி காட்டிய உறுதி, தற்போதைய பைடன் நிர்வாகத்தைத் தடை நீக்கம் செய்ய வைத்தது. கிஸ்சிங்கரின் காலம்தொட்டு சீன-ரஷ்யக் கூட்டு ஏற்படாமல் தடுப்பதில் அமெரிக்கா வெற்றிகண்டு வந்தது. இதுவரையிலும் அமெரிக்காவின் கொடுங்கனவாக இருந்துவந்த இந்த இணைவு உண்மையானது மட்டுமல்ல; இப்போது இதுவரையிலும் எண்ணிப்பார்க்காத ரஷ்ய – சீன – ஜெர்மனி கூட்டு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன.

உலகின் இதயமாக விளங்கும் ஆசிய – ஐரோப்பிய கண்டங்களின் நிலம் சார்ந்த இந்த வல்லரசுகள் இரு கண்டங்களின் இருமுனையிலும், இரு கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலும் இருக்கின்றன. தொழிற்துறை உற்பத்தி நாடுகளான சீனாவும், ஜெர்மனியும், எரிபொருள் மற்றும் ராணுவ வலிமை வாய்ந்த ரஷ்யாவின் இணைவு கடல் சார்ந்த வர்த்தகத்தின் மூலம் இதுவரையிலும் உலகைக் கட்டியாண்ட தீவு நாடுகளுக்கு தூக்கமின்மையை ஏற்படுத்தும். இதை உடைக்கும் நோக்கில் ரஷ்ய அதிபருடனான அதிபர் பைடனின் சந்திப்பு இரு நாடுகளின் உறவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில் பொருளாதார தடை நீக்கம் என்பதைத் தவிர, கொடுக்க அமெரிக்காவிடம் எதுவும் இல்லை. ரஷ்யா தற்போது அதை எதிர்பார்த்தும் இல்லை.

இந்தக் கூட்டத்துக்கு பிறகான ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்தில் ஜெர்மனியும் பிரான்ஸும் ஐரோப்பாவும் புதினுடன் பேச வேண்டும் என்ற முன்னெடுப்பைச் செய்தன. தற்போதைக்கு அமெரிக்க ஆதரவு நாடுகளைக்கொண்டு இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டாலும் இனிவரும் காலத்தில் இது நடக்கும் வாய்ப்பு அதிகம். இதுவரையிலும் அமெரிக்க அணிகளாக இருந்து வந்த நாடுகள் தங்களின் சொந்த பாதையில் பயணிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. சீனாவுடன் செய்துகொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் இப்போதைக்கு கிடப்பில் போடப்பட்டாலும் அது முழுமையாக இறந்து விடவில்லை. அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட ஒருபுறம் ஒப்புக்கொண்ட ஜப்பான் மறுபுறம் சீனாவின் தலைமையிலான RCEP ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இதுவரையிலும் பேச்சாக இருந்த ஒற்றை துருவத்தில் இருந்து பல்துருவ உலகம் என்பது நடைமுறை உண்மையாகிவிட்டது. அதன் அளவும் வேகமுமே இனி நாம் கவனமெடுக்க வேண்டியது.

உலக நாடுகள் எல்லாம் வரப்போகும் மாற்றங்களைத் துல்லியமாக அளவிட்டு தங்களை தயார்படுத்திக்கொண்டு வரும் வேளையில் இந்தியா, அதற்கு நேரெதிரான திசையில் செல்வது இது முதன்முறை அல்ல. சோவியத்தின் வீழ்ச்சியை முன்னறிந்து சீனா தனக்கு சாதகமாக தொழில்துறை முதலீடுகளை மட்டும் அனுமதிக்கும், தொழில்துறை இடைவெளியை இட்டு நிரப்பும், பொருளை ஏற்றுமதி செய்து வரும் வருவாயைக்கொண்டு தற்சார்பான பொருளாதாரத்துக்குத் தேவையான மூலதனப் பெருக்கத்தைச் செய்துகொண்டது. ஆனால், இந்த மாதிரியான அடிப்படை மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் இந்தியா கூச்சல் குழப்பங்களைச் சந்திக்கிறது. ஒருங்கிணைந்த வகையில் தமது நலன்களை முன்னிறுத்தி இந்திய ஆளும்வர்க்கத்தால் ஓர் அரசியலை முன்னெடுக்க இயலாமல் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வெளியில் இருந்துவரும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவான நிலை எடுக்கின்றன. இந்த மண்ணில் பார்ப்பனியம் உள்ளவரை இது தொடர்கதையாகவே இருக்கும்.

2008 முதல் முயன்று காங்கிரஸால் செய்யமுடியாத சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு அனுமதியை பாஜகவை ஆட்சியில் அமர்த்தி சாதித்துக்கொண்டது அமெரிக்க ஆளும்வர்க்கம். கொரோனா பெருந்தொற்றைப் பயன்படுத்தி அம்பானி – அதானியைக் கையில் வைத்துக்கொண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமான சந்தையாகவும் மாற்றிக்கொண்டது. இதில் ஏர்டெல், டாட்டா போன்றோர் இழப்பைச் சந்தித்தார்கள். பிக் பேஸ்கட், பேடிஎம் போன்றவற்றில் டாட்டாவுடன் இணைந்து முதலிட்ட சீனாவின் அலிபாபா இந்திய சந்தையை விட்டு வெளியேறி இருக்கிறது. அதன் பங்குகளை எல்லாம் டாட்டா நிறுவனம் வாங்கி இருக்கிறது. இணைய வர்த்தகத்தில் ஈடுபட ஓர் இணையச் செயலியை (Superapp) உருவாக்கி வரும் டாட்டா, ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவையை அளிக்கவுள்ளதாக அறிவித்து இருக்கிறது.

அடுத்து, சீன அதிபரை பைடன் சந்திக்க இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அது மரியாதை நிமித்தமாக இருக்கப் போவதில்லை. அதன் பிறகான பொருளாதார மாற்றங்கள் சீன – அமெரிக்க மோதலை மேலும் தீவிரப்படுத்தும் எந்த சாத்தியங்களும் இல்லை. இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தரக்குறியீட்டு நிறுவனங்கள் சொல்வதையோ, பங்குச் சந்தை உச்சத்தைத் தொடுவதையோ பொருட்டாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அது நிதிமூலதன சந்தை முதலீடுகளே தவிர, பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொழிற்துறை முதலீடுகள் அல்ல என அசட்டை செய்கிறது சீன அரசின் இதழான குளோபல் டைம்ஸ். அடுத்து, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்போது ஏற்படப்போகும் சுனாமியில் இது அடித்துச் செல்லப்படும் வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே வாராக்கடன் சுமையில் நலிவடைந்திருக்கும் இந்திய வங்கித்துறை அப்போது இன்னும் கடுமையான சரிவைச் சந்திக்கும்.

இதுவரையிலும் நிதி மூலதன சந்தை முதலீடுகளைக் கட்டுப்படுத்தி வரும் சீனா, இப்போது அதைத் திறந்துவிட தயாராக இருப்பதாகக் கூறுகிறது. அமெரிக்க நிதி மூலதன வங்கிகள் ஷாங்காய் நகரில் தங்களது அலுவலகங்களை ஏற்கனவே திறந்துவிட்டார்கள். முன்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மற்ற நிதி மூலதன வங்கிகளை தன்னுடன் இணைத்துக்கொண்ட அமெரிக்காவைப் போல இப்போது சீனா செயல்பட தயாராகிறது. இதுவரையிலும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என அம்பானி – அதானி; மோடி – அமித் ஷாவைத் தாக்கும் ராகுல் காந்தி மற்ற அமேசான் – வால்மார்ட் ஆகிய இருவரைப் பற்றி வாய்திறப்பது இல்லை. பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவந்த வேலை முடிந்துவிட்டது. பாஜகவுடன் வந்த வேண்டாத தொந்தரவாக மாறிவிட்ட முதலாளிகளை ஓரம்கட்டும் அல்லது தட்டிவைக்கும் நேரம் வந்திருக்கிறது.

ஏற்கனவே பாஜக எதிர்ப்பு அரசியல் களம் சூடாக இருக்கும் நிலையில் வரப்போகும் பொருளாதார சுனாமி அதை முடித்துவைக்கும். அதன் பிறகு, ஏர்டெல் தரவுகள், செயலி, பணப்பரிமாற்று வங்கி, சங்கிலித்தொடர் கடைகளைக் கையகப்படுத்துதல் எனத் தயாராக இருக்கும் டாட்டா, இணைய வர்த்தகக் களம் காண்பார். இந்தக் கூச்சல் குழப்பத்தில் சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சிறு, குறு வணிகர்களைக் குறித்தோ, உற்பத்தியாளர்கள் குறித்தோ பேச ஆளின்றி அந்தப் பிரச்சினை அப்படியே அடங்கிப்போகும்.

இப்படி ஒரு வணிகக் குழுமத்துக்குப் பதிலாக, இன்னொரு வணிகக் குழுமம் என்ற அரசியல் மாற்றம் அடிப்படையான பிரச்சினையான வறுமை, வேலைவாய்ப்பிழப்பைச் சரி செய்யாது. போட்டி அதிகமாக அதிகமாக, தற்போது சந்தையில் இருக்கும் சிறு வணிகர்கள், உற்பத்தியாளர்களின் வெளியேற்றம் இன்னும் அதிகரிக்கும். உலகம் முழுவதும் நெருக்கடியைச் சந்திக்கும் அமெரிக்க நிதி மூலதனம், இந்தியாவில் தனது பிடியை நெருக்கி, இங்கிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டி தனது நெருக்கடியைத் தீர்த்துக்கொள்ள முயலும். இவை இருக்கும் வறுமையையும் வேலைவாய்ப்பையும் அதிகரித்து இதற்கு அடுத்த உற்பத்தியாளர்களான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை வெளியேற்றுவதில்தான் வந்து நிற்கும். ஆகவே, அல்லல்படும் மக்களுக்குத் தற்காலிக ஆறுதலாக சில சமூகநலத் திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்தபின் அதைத் தொடர்வதற்கான பொருளாதார அடித்தளமின்றி அடுத்த ஆட்சியும் தோல்வியிலேயே முடியும்.

முன்பு 2ஜி விவகாரத்தில் திமுகவை பலிகொடுத்ததைப்போல அடுத்து வரும் பிரச்சினைகளுக்கு வேறு ஒரு கட்சியை பலிகொடுப்பார்கள். ஆர்ஜெடியின் தலைவர் சமூகநல அரசியலைத் தொடர்ந்து வலியுறுத்திப் பேசி வருகிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாநில சுயாட்சி சுயசார்பு எனத் தொடர்ந்து பேசி வருகிறார். இவர்களின் பேச்சுகள் இந்தப் பெருநிறுவனங்கள் இந்தியா முழுவதும் எந்தக் கட்டுப்பாடும் வரைமுறையுமின்றி சுரண்ட வழங்கப்பட்டிருக்கும் அந்த பொருளாதார சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்காமல் எந்த அரசியல் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அதேபோல தேசிய நிறுவனங்கள் சுயசார்பு பெறுதல் என்ற பெயரில் தற்போது ஜியோவும் எதிர்காலத்தில் டாட்டாவும் அதிகமாகப் பலன் பெற செய்யும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தைக் கேள்விக்குட்படுத்தாமல் பிராந்திய சுயசார்பு பேசுவது வெறும் வாய்ச்சவடாலாகவே இருக்கும்.

இந்தப் பிரச்சினைக்கான தீர்வின் முதல்படி, எந்த இணைய வர்த்தகப் பெருநிறுவனமும் இருக்கும் சிறு வணிகர்களும், உற்பத்தியாளர்களும் சந்தைப்படுத்த உதவும் வர்த்தக சேவைகளை வழங்க வேண்டுமே ஒழிய, நேரடி விற்பனையில் ஈடுபடக் கூடாது என்பது போன்ற குறைந்தபட்ச அரசியல் கோரிக்கையாவது முன்வைத்து செயல்படுவதாக இருக்க வேண்டும். அந்தந்தப் பகுதி மக்கள் அரசுகளின் அனுமதியோடும் பங்கேற்பேடும் இந்தப் பெருநிறுவனங்கள் இயங்கும் வகையில் ஜனநாயக உரிமைகளை மாற்றி அமைக்க முற்பட வேண்டும். அது இப்படி நடக்கும் இணைய வர்த்தக பலனை எல்லோருக்கும் பரவலாக்கி வேலைவாய்ப்பைப் பெருக்கும். இப்படிப் பரவலாக உருவாகும் மூலதனமும் தேவையும் அடிமட்டத்தில் ஒரு பொருளாதாரச் சுழற்சியை உருவாக்கி, மேலும் வலுவான தொழில்துறை உருவாக வழிவகுக்கும். அதுவல்லாது இருக்கும் வணிக குழுக்களின் நலன்களோடு எந்த நிபந்தனையுமின்றி இவர்கள் இணைந்து பயணிக்க முற்படுவார்களேயானால் அது இந்தக் கட்சிகளின் இருப்புக்கு எதிராகவும் இவர்களை ஆதரிக்கும் மக்களுக்கும் பெரும் கேடாகவும் முடியும்.

**முற்றும்**

**

[பகுதி 1 – ஜி7, நேட்டோ, பைடன் – புதின் சந்திப்பும் அதன் இந்திய எதிரொலிப்பும்!](https://www.minnambalam.com/politics/2021/07/04/17/G7-summit-and-its-reflections-to-India)

**

** பாஸ்கர் செல்வராஜ் **

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு **[naturebas84@gmail.com](mailto:naturebas84@gmail.com)**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *