பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும் என்று பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை புனரமைப்பது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த வள்ளுவர் கோட்டம் 5.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கட்டட அமைப்பு 68,275 சதுர அடி கொண்டது. இந்த தேர் 106 அடி உயரம் கொண்டது.
இங்குள்ள கட்டிடம் பழுதடைந்துள்ளது. எனவே இங்குள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களின் அடையாளமே வள்ளுவர் தான். அவர் எந்த மதத்தையும் சாராதவர், அனைவருக்கும் பொதுவானவர். எனவே அவரது பெயரில் வள்ளுவர் கோட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர்.
ஆனால், கடந்த ஆட்சியாளர்களுக்கு வள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை. சமச்சீர் கல்வியிலிருந்த வள்ளுவர் படத்தையே கிழித்துப் போட்டுவிட்டார்கள். வள்ளுவர் என்றாலே திமுக உறுப்பினர் போல் அவர்களது மன நிலை இருக்கிறது.
எனவே கடந்த 10 ஆண்டுக்காலத்தில் வள்ளுவர் கோட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. கட்டிடத்தின் மேல்தளம் முதல் கீழ்தளம் வரை அனைத்தும் மோசமான நிலையில் இருக்கிறது. திருவாரூர் தேரை அடையாளமாகக் கொண்டு இந்த தேர் உருவாக்கப்பட்டது. இந்த தேருக்கான கல் திருவண்ணாமலையிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்தியாவிலேயே இப்படி ஒரு தேரை பார்க்க முடியாது. அப்படிப்பட்ட தேரும் மோசமான நிலையில் இருக்கிறது.
இதையெல்லாம் புனரமைக்க வேண்டும். முதல்வர் உத்தரவின் பேரில் இன்று ஆய்வு மேற்கொண்டேன். பார்வையாளர்கள் குடும்பத்தோடு வந்து பார்த்துச் செல்லும் அளவிற்கு அனைத்தும் சீரமைக்கப்படும். அரசு நிகழ்ச்சிகள் எல்லாம் இங்கு நடைபெறும் வகையில் புனரமைப்பு பணிகள் நடைபெறும்” என்றார்.
**-பிரியா**
�,