புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வெற்றிபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் நேற்று (ஜூலை 1) பிரதமர் மோடியை சந்தித்தனர்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சர்கள் ஜூன் 27 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். பாஜக சார்பில் நமச்சிவாயம், சாய் சரவண குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதையடுத்து புதுச்சேரி சபாநாயகர், பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் ஜூலை 1 ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தனர், அவர்களோடு பாஜக புதுச்சேரி பொறுப்பாளரான மெக்ராம், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் ஆகியோர் இருந்தனர்.
அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டாலும் இன்னும் அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை. பாஜகவுக்கு வளமான முக்கியமான துறைகள் வேண்டுமென்று மேலிடப் பொறுப்பாளர்கள் முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் பாஜக அமைச்சர்களுக்கான துறைகள் டெல்லியில் இருந்து முதல்வருக்கு முறைப்படி தெரிவிக்கப்படும் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
**-வேந்தன்**
�,