ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று(ஜூலை 1) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், உயர் கல்வித்துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர். அதில், மாணவர் சேர்க்கை, நேரடி வகுப்புகள் நடத்துவது, பருவத் தேர்வுகள் நடத்துவது, நிர்வாக செயல்பாடுகள், காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். பல்கலைக்கழகங்களில் பதிவாளர், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பணி நியமனங்களுக்கும் நீதிமன்ற உத்தரவின்படி, வெளிப்படைத் தன்மையுடன் ஒரேமாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்.பில் வேண்டுமா? வேண்டாமா? என்பதில் இருவேறுபட்ட கருத்துகள் இருந்தாலும், சென்னை பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகத்திலும், எம்.பில் பாடம் திட்டத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், “ஏற்கனவே அறிவித்தப்படி, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு நடைபெற்றது போல் ‘DOTE’ முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். ஒற்றைச் சாளர முறையில் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும.
மூன்று பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க இணைச் செயலாளர்கள், துணை செயலாளர்கள் அடங்கியக் குழு அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
**-வினிதா**
�,