கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையைப் புதிய அரசு சிறப்பாகக் கையாள்கிறது என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தமிழகத்தில் வேகமாகப் பரவியதையடுத்து தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், கோயில் பூசாரிகள் ஆகியோருக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
அதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. கரூரில், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட வாகனங்களை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் வைரஸ் தொற்று பரவலைப் பூஜ்யமாக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரூரில் 6,079 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று பாமக சார்பில் 2020-21ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதி அறிக்கை தொடர்பான கூட்டம் ஜூம் செயலி மூலம் நடைபெற்றது.
இதில் பேசிய அன்புமணி ராமதாஸ், “புதிய அரசு பொறுப்பேற்று ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகின்றன. இன்றைய சூழல் கொரோனா காரணமாக வேறு எதையும் செய்ய முடியாத சூழலாக இருக்கிறது. இரண்டாவது அலை அடித்து முடித்துக் குறைந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் அலையைத் தமிழக அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது. இரண்டாம் அலை தீவிரமாக ஏற்பட்டதற்கு காரணமே தேர்தல்தான்.
தேர்தல் சமயத்திலிருந்த இடைக்கால அரசால் எதுவுமே செய்ய முடியவில்லை. எந்த அதிகாரமும் இல்லாததால் ஓர் ஆலோசனையைக் கூட அப்போதைய முதல்வரால் மேற்கொள்ள முடியவில்லை. கட்சி வேறுபாடு இன்றி நல்ல திட்டங்களைச் செய்தால் நாங்கள் பாராட்டவே செய்வோம்” என்றார்.
**-பிரியா**
�,”