வரும் 21ம் தேதியுடன் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகப் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது.
ஆனால் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்ததன் காரணமாகத் தளர்வுகள் கூடுதலாக அளிக்கப்படவில்லை.
தற்போது தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,633 என்ற அளவில் குறைந்துள்ளது. மேற்குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் கோவை, ஈரோடு மாவட்டங்களைத் தவிர மற்ற பகுதிகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது, ஜவுளி உள்ளிட்ட கடைகள் இயங்க அனுமதிப்பது, கடைகள் இயங்கும் நேரத்தை அதிகரிப்பது, இறப்பு மற்றும் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டைத் தளர்த்துவது, பாதிப்புக் குறைவாக உள்ள பகுதிகளில் போக்குவரத்தை அனுமதிப்பது உள்ளிட்ட தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**
�,