�
டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்கள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நேற்று (ஜூன் 17) அறிவித்துள்ளது.
கொரோனா பரவல், ஊரடங்கு காரணமாக ஓட்டுநர் உரிமம், உடல்தகுதி சான்று உள்ளிட்ட ஆவணங்களை காலாவதி தேதிக்குப் பிறகு புதுப்பிப்பதில் வாகன ஓட்டிகள் சிரமத்தைச் சந்தித்தனர்.
இதன் காரணமாக வாகன சட்ட ஆவணங்கள் செல்லுபடியாகும் தேதிகள் நீட்டிக்கப்பட்டு வந்தன. கடந்த காலங்களில் 2020 மார்ச் 30, ஜூன் 9, ஆகஸ்ட் 24, டிசம்பர் 7, 2021 மார்ச் 26 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்பட்டன.
இந்நிலையில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவுச் சான்றிதழ், பர்மிட் உள்ளிட்ட ஆவணங்கள் 2021 ஜூன் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2020 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 2021 செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலாவதி ஆகும் அனைத்து ஆவணங்களையும் 2021 செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் ஆவணங்களாகக் கருதும்படி அமலாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
**-பிரியா**
�,