சசிகலாவுடன் பேசியதற்காக அதிமுகவிலிருந்து நேற்று 15 பேர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், சசிகலா பேசும் மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நேற்று அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில், சசிகலாவிடம் பேசியவர்களைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உட்பட 15 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
அதுபோன்று அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தியும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இருவரும் அறிவித்தனர்.
இந்தச் சூழலில் சசிகலா பேசும் மற்றொரு ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அதிமுக நிர்வாகி குபேந்திரனிடம் பேசும் சசிகலா, ‘கவலைப்படாதீங்க… தைரியமாக இருங்கள் விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன். கட்சியை மீண்டும் நல்ல வழியில் கொண்டு வருவோம், அதை யாராலும் தடுக்க முடியாது.
இது போன்று எத்தனையோ நான் பார்த்திருக்கிறேன். 1987ஆம் ஆண்டு தலைவர் மறைவின்போது, ஏற்பட்ட பிரச்சினையை அம்மாவுடன் இருந்து பார்த்திருக்கிறேன். அதில் இருந்து மீண்டு வந்துதான் ஆட்சிக்கு வந்தோம். அதுபோன்று மீண்டும் நடக்கும்.
இவர்கள் செய்வது எல்லாம் புதிது அல்ல. ஜெயலலிதா போல நாமும் தொண்டர்களுடன் வந்து காட்டி, ஆட்சியை அமைப்போம்’ என்று கூறியுள்ளார்.
இது சசிகலாவின் 41ஆவது ஆடியோவாகும்.
**-பிரியா**
�,