தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு இன்று (ஜூன் 13) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து உடனடியாக போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமாக எந்த பொருளும் சிக்கவில்லை.
இதையடுத்து இந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. எனவே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்ட நபர் யார்?, அவர் எதற்காக விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறினார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் விஜய், அஜித் என சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
கடந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த நபர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் செய்திகள் வெளியாகின.
இந்த சூழலில் தற்போது விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் அந்த நபரா அல்லது வேறு யாரேனும் பின்னணியில் இருக்கிறார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
** பிரியா**
�,