ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பதுதான் உலகுக்கு இந்தியா வழங்கும் செய்தி என்று பிரதமர் மோடி நேற்று (ஜூன் 12) நடைபெற்ற ஜி7 மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில் சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம்” என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டு நேற்று ஜி7 உச்சி மாநாடு காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
இங்கிலாந்து அரசு ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டுக்கு, இந்தியா, ஆஸ்திரேலியா, கொரிய குடியரசு மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியவும், தடுப்பூசி செலுத்தும் பணியிலும் டிஜிட்டல் உபகரணங்களை இந்தியா வெற்றிகரமாகப் பயன்படுத்தியது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உலக அளவில் சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க உலகளாவிய ஒற்றுமை இருக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றைத் திறம்பட எதிர்கொள்ள, ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுதான் இந்த உச்சி மாநாட்டில் இந்தியா உலகுக்கு வழங்கும் செய்தி.
கொரோனா பரவலைத் தடுக்க சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் தொழில்நுட்பங்களுக்கு வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைகளுக்கான ஒப்பந்தத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்காவும், இந்தியாவும் உலக வர்த்தக அமைப்பிடம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைக்கு ஜி7 நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.
இரண்டாவது நாளாக இன்றும் ஜி7 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இன்றைய அமர்விலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
**-பிரியா**
�,”