அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழக்கமான அளவைவிடக் கூடுதலாக நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ அரிசி இந்த மாதத்தில் மொத்தமாக வழங்கப்படும் என்று தமிழக உணவுத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு இரண்டு மாதங்களுக்கு தலா ஐந்து கிலோ இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் அரசி அட்டைதாரர்களுக்குக் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதில், “தமிழகத்தில் 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 18.64 லட்சம் அந்தியோதயா அன்னயோஜனா பிரிவுக்கு மாதம்தோறும் அதிகபட்சம் 35 கிலோவும் 93 லட்சம் முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா ஐந்து கிலோவும் மீதமுள்ள முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகின்றன.
அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தேவைக்கேற்ப, புழுங்கல் அரிசி, பச்சரிசி என வாங்கி கொள்ளலாம். கொரோனா பரவலின் இரண்டாம் அலையால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மே மற்றும் ஜூன் மாதங்களில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் நபர் ஒருவருக்கு கூடுதலாக தலா ஐந்து கிலோ தானியங்களை விலையில்லாமல் வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, மத்திய தொகுப்பிலிருந்து, தமிழகத்துக்குக் கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களையும் சேர்த்து கூடுதல் அரிசி வழங்கி வருகிறது. உதாரணமாக, ஈரலகு உள்ள குடும்பத்துக்கு 20 கிலோ, மூன்று அலகு உள்ள குடும்பத்துக்கு 30 கிலோ என்ற அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் சேர்த்து, இரு மடங்கு அரிசி கிடைக்கும்.
மே மாதம் வழங்க வேண்டிய இந்த கூடுதல் அரிசி விநியோகம் அடுத்த மாதம் (ஜூலை, 2021) சேர்த்து வழங்கப்படும். எனவே, ஒன்றிய அரசின் கூடுதல் அரிசியும் சேர்த்து, அரிசி குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜூன் மாதத்தில் மொத்தமாக விநியோகிக்கப்படும் அரிசி விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,