கோயம்பேடு: தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி!

politics

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் வருகிற 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்டில் அனுமதிக்கப்படுவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மளிகை, காய்கறி, பழம், பூ மொத்த மற்றும் சிறு மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மார்க்கெட் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் மார்க்கெட்டுக்குப் பொருட்கள் வாங்க வந்த சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக மூடப்பட்டு இருந்தது. காய்கறி, பழம், பூ மார்க்கெட் ஆகியவை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு மார்க்கெட், தற்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது.

சில்லறை வியாபாரிகள் மட்டுமே சந்தைக்குள் பொருட்கள் வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. தனியார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களும் மார்க்கெட் வளாகத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, பழ மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளைத் தவிர்த்து சிறு மொத்த விற்பனை கடைகள் தினசரி 30 சதவிகிதம் அளவுக்கே சுழற்சி முறையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆய்வு செய்தார். மேலும் வியாபாரிகள், தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றுகிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி, ஊரடங்கு காலத்தில் அளிக்கப்பட்டுள்ள தளர்வை இன்றியமையாத தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையின்றி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அதேபோல் கோயம்பேடு சந்தைக்குள் வரும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *