அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்வர், துணைமுதல்வரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை பசுமைவழிச் சாலையில் இருக்கும் அரசு பங்களாவான தென்பெண்ணை இல்லத்தில் குடியிருந்து வந்தார். அவர் தற்போதைய சட்டமன்றக் கட்சித் தலைவராக அதாவது எதிர்க்கட்சித் தலைவராக தேந்தெடுக்கப்பட்டிருந்தால்… அவரது அரசு இல்லத்தில் தொடர்ந்து வசிக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவரே தொடர்ந்து அரசு இல்லத்தில் தங்கியுள்ளார்.
எனவே ஓ.பன்னீர் செல்வம் தனது அரசு பங்களாவை காலி செய்துவிட்டு நேற்று(ஜூன் 4) வாஸ்து நாள் என்பதால், தி.நகர் கிருஷ்ணா சாலையில் இருக்கும் ஒரு வீட்டில் குடியேறியிருக்கிறார். மிக எளிமையான முறையில் நேற்று பால் காய்ச்சியிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.
நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் நல்ல நாளாக இருப்பதால் வருகை புரிந்து சில மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சசிகலா கட்சியிலேயே இல்லை. அவர் ஏற்கனவே அரசியலில் இருந்து விலகுவதாக கூறிவிட்டார். மேலும் அவர் அதிமுக தொண்டர்களுடன் பேசவில்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுடன் பேசியிருக்கிறார்”என்று மறுப்பு தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன் கே.பி.முனுசாமி கூறியதையே நேற்று எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த விவகாரம் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கருத்தையும் இன்னும் தெரிவிக்கவில்லை.
அதேநேரம் தனது நடவடிக்கைகள் மூலம் ஓபிஎஸ் சில செய்திகளை உணர்த்தி வருவதாக கூறுகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.
“நேற்று ஓபிஎஸ் பால் காய்ச்சிய புது வீட்டுக்கும், தற்போது தி.நகரில் சசிகலா தங்கியிருக்கும் வீட்டுக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட இருக்காது. மிகவும் அருகருகே இரு வீடுகளும் அமைந்திருக்கின்றன. இனி தேவைப்பட்டால் வாக்கிங்கிலேயே போய் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்துவிடுவார் ஓபிஎஸ். இருவருக்குமான தகவல் பரிமாற்றத்துக்கும் இது மிக எளிதாக இருக்கும். அந்த வகையில் சசிகலாவை நெருங்கிவிட்டார் ஓபிஎஸ் என்பதுதான் இந்த புதுவீடு மூலம் அவர் சொல்லியிருக்கும் செய்தி” என்கிறார்கள்.
**-வணங்காமுடி வேந்தன்**
�,