ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக ஜூன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகக் கடந்த ஒருவாரமாகப் பாதிப்பு குறைந்து வருகிறது. 36ஆயிரத்தைத் தாண்டிய தினசரி பாதிப்பு தற்போது 25 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. எனினும் இறப்பு எண்ணிக்கை குறையவில்லை. தினசரி இறப்பு எண்ணிக்கை 400க்கும் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு நிறைவடைய இன்னும் 3 தினங்களே உள்ளதால், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 4) ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில், பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடிய பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறையைக் கடைப்பிடிக்கலாமா, பாதிப்பு குறைந்து வரும் பகுதிகளில், மளிகை, காய்கறி கடைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது, அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,