தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இதற்கு மத்திய சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தமிழகத்தைக் காட்டிலும் குஜராத் மாநிலத்திற்கு அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில், “ தமிழகத்தில் தடுப்பூசிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை.
2021 ஜூன் 2ஆம் தேதி வரை, 1 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தமிழகத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 93.3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களிடம் 7.24 லட்சம் தடுப்பூசிகள் தற்போது உள்ளன.
ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசிகளின் மொத்த டோஸ்கள் பற்றிய தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜூன் மாதத்தின் முதல் 2 வாரத்தில் தமிழகத்துக்கு 7.48 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும். அடுத்த 2 வாரத்தில் கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசின் மூலமாகக் கிடைக்கும்.
18-44 வயதினருக்கான புதிய தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கொரோனா தடுப்பூசி உத்தியின் கீழ் மாநிலத்துக்குக் கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளின் அளவு குறித்தும் தமிழ்நாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-44 வயதினருக்கான 3ஆம் கட்ட தடுப்பூசி திட்டத்தின்கீழ், ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு 16.83 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும்” என்று கூறியுள்ளது.
**-பிரியா**
�,