தற்போது அரசியில் இருந்து விலகி இருக்கும் சசிகலா, ‘விரைவில் அதிமுகவைச் சரிசெய்வோம். கவலைப் படாமல் இருங்கள்’ என்று தொண்டர்களிடம் பேசிய உரையாடல் ஆடியோ வெளியானது. இது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சசிகலா எந்தச் சூழலிலும் அதிமுகவில் நுழைய முடியாது. சசிகலா ஏற்படுத்தும் குழப்பத்துக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
ஆனால் முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தேர்தலுக்கு முன்னும் பின்னும் சசிகலா ஆதரவு அணுகுமுறையை மேற்கொண்டுள்ளதாக அதிமுகவிலேயே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதிமுகவுக்குள் இந்த விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இது தொடர்பாக கே.பி.முனுசாமி வட்டாரத்தில் நாம் விசாரித்தோம்.
“அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக முதல் கலகக் குரலை எழுப்பியவர் கே.பி.முனுசாமிதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு கே.பி.முனுசாமி எழுப்பிய இந்த குரல்தான் ஒரு கட்டத்தில் ஓ. பன்னீரை ஜெயலலிதாவின் சாமாதிக்கே செல்ல வைத்தது என்று சொல்லும் கே.பி .முனுசாமி வட்டாரங்கள், “தன்னை ஓபிஎஸ் ஆதரவாளர் என்று மற்றவர்கள் சொல்வதை அவர் விரும்பவில்லை” என்கிறார்கள்.
மேலும் அவர்களிடம் நாம் பேசிய போது, “ஓ.பன்னீர் என்னுடைய குரலுக்கு வலு சேர்க்கும் வகையில் என்னோடு இணைந்தாரே தவிர, நான் ஓ.பன்னீருடைய அணியில் இணையவில்லை. என்னுடைய குரலுக்குரிய அணியில் தான் அவர் இருந்தார்.
தற்போது அவர்தான் மாறுபட்டு, சசிகலாவை ஆதரிக்கும் முடிவில் இருக்கிறார். மீண்டும் சசிகலாவிடம் அதிமுகவின் தொண்டர்களை அடிமையாக்கி வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இதனை நான் ஏற்க மாட்டேன் என்று ஓ.பன்னீரிடமே சொல்லிவிட்டேன்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவை ஆதரிக்கமாட்டார். ஒரு வேளை அவர் ஆதரித்தாலும். நான் என்றும் சசிகலாவுக்கு எதிராக அதிமுகவில் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்பேன் என்கிறார் கே.பி.முனுசாமி. இதுதான் அவருடைய நிலைப்பாடு” என்கிறார்கள் அவருக்கு நெருங்கியவர்கள்.
[ஓபிஎஸ்- கே.பி.முனுசாமி: இடையே நடப்பது என்ன?](https://www.minnambalam.com/politics/2021/06/02/34/kpmunusamy-against-opanneerselvam-sasikala-issue-edapadi-palanisamy-admk-cvshanmugam)
**-பிரியா**
�,”