�
கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட 767 பேருக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
யாஸ் புயல் கன்னியாகுமரியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. கனமழை காரணமாக சித்தாறு 1, சித்தாறு 2, மாம்பலத்துறையாறு, தாமிரபரணி, பழையாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு குடியிருப்பு பகுதிகளிலும், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களிலும் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
இதில் 238 கூரை வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 35 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. 373 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட வேளாண், தோட்டக்கலை பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது என முதல் நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். முழுவதும் சேதமடைந்த கூரை வீட்டுக்கு தலா 5,000 ரூபாயும், பகுதியளவு சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா 4,100 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்.
பாதிப்படைந்த மானாவாரி, நீர்ப்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு 20,000 வழங்கப்படும். நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் ஒரு ஹெக்டேருக்கு 10,000 ரூபாயும், பல்லாண்டுக் கால பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும். நிவாரணத் தொகையை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,