தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருக்கிறது. எனினும், கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது.
கொரோனா பரவல் சென்னையைக் காட்டிலும் தற்போது கோவையில் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அப்போது அதிமுக மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, “கோவை போன்று வேறு எங்கும் மருத்துவ வசதிகள் இல்லை. எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள மின் மயானத்தில் சடலங்களை எரிக்க இடம் இல்லாமல் உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.
கோவையில் 21 பேருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதற்குத் தேவையான மருந்துகளை வரவழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
அதிக வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். தற்போதைய சூழலில் மக்களைக் காப்பாற்றுவது முக்கியம். இதுகுறித்து ஆளும் கட்சிக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கோரிக்கை வைத்துள்ளோம்.
மாவட்டத்தில் அதிமுகவினரை மக்களுக்கு உதவி செய்ய அனுமதிப்பதில்லை. பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கச் சென்றால் கூட அதிமுகவினரை போலீசார் அனுமதிப்பதில்லை. வழக்குப்பதிந்துவிடுவோம் என்று எச்சரிக்கின்றனர்” என கூறினார்.
**-பிரியா**
�,