vபத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு!

politics

கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையில் முன்கள பணியாளர்களான காவல்துறையினர், சுகாதாரத் துறையினர், பத்திரிகைத் துறையினர் ஆகியோர் தொற்று பாதிப்புக்கு ஆளாவது மட்டுமில்லாமல், அதிகளவில் உயிரிழந்தும் வருகின்றனர்.

பத்திரிகையாளர்களும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவார்கள். முன்கள பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரியமுறையில் வழங்கப்படும் என மே 4ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.

மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கி வரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை / மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை / இலவசப் பேருந்துப் பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனை தற்போது உயர்த்தி வழங்கக் கோரி பெறப்பட்ட கோரிக்கையினை கனிவோடு பரிசீலித்த முதல்வர், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதுபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூ.5 இலட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினை பரிசீலித்து, அதனை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பத்திரிகைத் துறை மற்றும் அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *