கொரோனா காரணமாக இளைஞர்கள் பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர். சில நிறுவனங்கள் ஊதியம் கொடுக்க முடியாமல், தங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 14.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த மார்ச் மாதம், 6.50 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை ஏப்ரல் மாத முடிவில் நாட்டின் 7.97 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மே மாதம் 16ஆம் தேதி முடிந்த வாரத்தில் மட்டும் வேலைவாய்ப்பின்மை 14.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என கூறியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஐடி, வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
அத்தியாவசிய பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளித்ததோடு, ஊழியர்களைத் தொழிற்சாலைகளின் வாகனங்களிலேயே அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்று தங்களது ஊழியர்களை பணிக்கு வருமாறு அழைத்திருக்கிறது. ஆனால், ஊரடங்கிற்குப் பிறகு வருகிறேன் எனக் கூறிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான வாட்ஸ் அப் உரையாடல் ஒன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ‘பணிக்கு வரவில்லை என்பதால் நிர்வாகம், உங்களை பணியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் குறிப்பிட்டு ℳsd Kutty என்ற ட்விட்டர்வாசி, அமைச்சர் தங்கம் தென்னரசுவை டேக் செய்து, ‘அந்த நபருக்கு எதாவது உதவுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.
இந்த ட்வீட்டுக்கு உடனடியாக பதிலளித்த தங்கம் தென்னரசு, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த விவகாரத்தை எனது கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி என்றும் பதிலளித்துள்ளார்.
**-பிரியா**
�,”