தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் நூறாவது நாளான மே 22ஆம் தேதி போராடிய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று துப்பாக்கி சூடு சம்பவத்தின் மூன்றாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. குமரெட்டியபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுக்கு மலர்தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தி அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலக கூட்ட அரங்கில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் கீதாஜீவன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, “ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் அவரவர் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை மனதார வரவேற்பதுடன் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் தூத்துக்குடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் 600 பேருக்கு அரிசிப் பைகளை வழங்கினார்.
மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்!
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த மண்ணின் மக்கள், சமூக விரோதிகளென சித்தரிக்கப்பட்டு அரசப்பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களால் பலியான நாள் இன்று!
மண் காக்க மக்கள் காக்க மாசு போக்க தன்னுயிர் ஈந்து களப்பலியான உறவுகளுக்கு வீரவணக்கம்! pic.twitter.com/5yXxNfdIRD
— சீமான் (@SeemanOfficial) May 22, 2021
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் பக்கத்தில், “மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்! ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த மண்ணின் மக்கள், சமூக விரோதிகளென சித்தரிக்கப்பட்டு அரசப்பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களால் பலியான நாள் இன்று! மண் காக்க மக்கள் காக்க மாசு போக்க தன்னுயிர் ஈந்து களப்பலியான உறவுகளுக்கு வீரவணக்கம்!” என்று பதிவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,”