பிளஸ் 2 மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்ப்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வு நடத்தப்படும் என இன்று (மே 19) அறிவிப்பு வெளியானது.
கடந்த மே 3ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் தான் கொரோனா பரவல் தினசரி அதிகரித்து வருகிறது. இதனால் பிளஸ் 2 தேர்வு எப்போது நடைபெறும்? ஆன்லைனில் நடத்தப்படுமா? நேரடியாகப் பள்ளிக்குச் சென்று எழுத வேண்டுமா என பல கேள்விகள் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.
அதேசமயம் தேர்வு நடத்த வேண்டும் என்பதே பல பெற்றோர்களின் கருத்தாக இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், கண்டிப்பாகத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதனால் வீட்டிலிருந்தபடியே மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
அதில், வாட்ஸ் அப்பில் மாணவர்களுக்குத் தனியாக ஒரு குழுவும், மாணவிகளுக்குத் தனியாக ஒரு குழுவும் தொடங்கி, அதில் வினாத் தாள்களை அனுப்பித் தேர்வு நடத்த வேண்டும். மாணவர்கள் வினாத் தாளில் தங்களது பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட மதிப்பெண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, தேர்வு எழுதிய பிறகு பிடிஎஃப் வடிவத்தில் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் இந்த அர்றிவிப்பை தேர்வு துறை வெளியிட்டதாக தகவல் வெளியானது. இதற்கு, “12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்த வேண்டும் என்று எவ்வித உத்தரவையும் அதிகாரப்பூர்வமாக அரசுத்தேர்வுகள் துறை பிறப்பிக்கவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சிலர் வெளியிட்ட செயல்முறைகளை அதிகாரப்பூர்வமாக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டதாகத் தெரிவிப்பது மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும்” என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**
�,