தமிழகத்தில் சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததையடுத்து, பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். நேற்று எட்டு மருத்துவமனை டீன்கள் மாற்றப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாநில தொழில்கள் ஊக்குவிப்பு கழக நிர்வாக இயக்குநர் பதவி வகிக்கும் அனீஷ் சேகர் மாற்றப்பட்டு, மதுரை ஆட்சியராக அன்பழகனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூகநலம் மற்றும் சத்துணவு துறை இணைச் செயலர் கார்மேகம் மாற்றப்பட்டு, சேலம் மாவட்ட ஆட்சியராக ராமனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில ஆணையச் செயலர் பாலசுப்பிரமணியன் மாற்றப்பட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியராக சேகர் சாகமுரிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் மற்றும் வணிக வரித்துறை கூடுதல் ஆணையராகப் பதவி வகிக்கும் சிவராசு மாற்றப்பட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்
திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மாற்றப்பட்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியராக கார்த்திகாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,