தமிழகத்தின் புதிய முதல்வரான மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று (மே 9) நடைபெற இருக்கிறது.
தமிழக முதல்வராகக் கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்ற ஸ்டாலின் கொரோனா இழப்பீடாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய், டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும், பால் விலைக் குறைப்பு உள்ளிட்ட உத்தரவுகளை அதிரடியாகப் பிறப்பித்தார். இந்த நிலையில் தமிழகத்தின் தற்போதைய கொரோன தாக்கத்தால் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அமைச்சரவை இன்று விவாதிக்கும் என்று தெரிகிறது. முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் அனைத்து அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஆவலாக இருக்கின்றனர்.
ஆனால், இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இரு அமைச்சர்கள் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான எஸ்.எஸ்.சிவசங்கர், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரிகிறது.
அமைச்சர் சிவசங்கர் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு வருகிறார். அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனை சென்று சி.டி.ஸ்கேன் எடுத்துள்ளார். பதவியேற்பு விழாவில் மேடையேறிய அனைவருக்கும் கொரோனா சோதனை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருவருக்கும் தொற்று இருந்திருக்க வாய்ப்பில்லை. அதன்பிறகு பல்வேறு தரப்பில் இருந்தும் நேரில் வந்து அமைச்சர்களை வாழ்த்தினர். வாழ்த்த வந்தவர்கள் மூலமாகத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
இது ஒருபக்கம் என்றால் இலாகா ஒதுக்கீடு தொடர்பான அதிருப்தி, சீனியர் அமைச்சர்கள் சிலரிடம் இன்னும் இருக்கிறது. குறிப்பாக திண்டுக்கல் ஐ.பெரியசாமி தொடர்ந்து அதிருப்தியில் இருக்கிறார். அவர் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அதனால் வர மாட்டார் எனவும், இதற்காக அமைச்சரவைக் கூட்டத்துக்கு வராமல் இருப்பாரா… வந்துவிடுவார் என்றும் அமைச்சரைச் சுற்றியுள்ள இரு வேறு தரப்பினரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
**-வேந்தன்**
.�,