கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் மே 10ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்தார். அதன்படி, அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1000 வழங்கப்பட்டது. இந்த தொகையை ரூ.4000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திலும், திமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.4000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
தற்போது திமுக ஆட்சி அமைத்து நேற்று முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், மேற்குறிப்பிட்ட வாக்குறுதியை நிறைவேற்ற அரசாணை வெளியிட்டார். அதன்படி ரூ. 4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மே 10ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளதாக, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சுமார் 2,07,67000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 4000 ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட இருக்கிறது. முதல் தவணையாக ரூ. 2000 வழங்கப்படும். சென்னை கோட்டையில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார். மே 10ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலை கடைகளிலும், தினசரி 200 பேர் வீதம், காலை 8 மணி முதல் 12 வரை வழங்கப்படும்” என்றார்.
அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பித்திருக்கும் சர்க்கரை அட்டைக்காரர்களுக்கு, இந்த நிவாரண தொகை வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இப்போதைக்கு இல்லை எனக் குறிப்பிட்டார். இந்த பணம் முறையாக மக்களுக்குச் சென்றடைகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பார்கள். இதுமட்டுமின்றி டோக்கன் முறையாக வழங்கப்படுவதைக் கண்காணிக்கத் துணை தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
**-பிரியா**
�,