நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மே 7) முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆளுநரின் தேநீர் விருந்திலும் முதல்வர் கலந்துகொண்டார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று கலைஞர் திருவுருவப்படத்திற்கும், தொடர்ந்து அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதையும் செலுத்தினார்.
இந்நிகழ்வுகளை அடுத்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஸ்டாலின், கொரோனா நிவாரணத் தொகை, மகளிருக்குக் கட்டணமில்லா பயணச்சலுகை, பால் விலை குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை, தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டின்கீழ் கொரோனா சிகிச்சை என மக்கள் நலன் காக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்!
காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்குத் தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!” எனப் பதிவிட்டுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்திருக்கிறது, ஸ்டாலின் முதன்முறையாக முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். இதனை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
**-பிரியா**
�,